Saturday, March 9, 2013

மாரடைப்பு: ஆண்களுக்கு அறிகுறிகள் என்ன?

பொதுவாக மருத்துவப் பரிசோதனைகள் நம் உடலில் தோன்றும் ஆரம்ப அறிகுறிகளிலிருந்தே தொடங்குகிறது. உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை மூலம் நலக் குறைவை நம் உடல் உணர்த்துகிறது. இந்த ஆரம்ப அறிகுறிகள் நோயின் தன்மையைப் பொருத்து ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது. 

உதாரணமாக ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலியிருக்கும்; ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், அவருக்கு நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும். எனவே, ஒருவரின் வலியைப் பொருத்து நோயின் தீவிரத்தைக் கணிக்க முடியாது. எனவே, மருத்துவப் பரிசோதனையின் போது உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மிகச் சரியாக டாக்டரிடம் கூற வேண்டும். அதாவது உடல் உறுப்புகளில் எங்கிருந்து வலி ஆரம்பமாகிறது, அது மற்ற பாகங்களுக்குப் பரவுகிறதா அல்லது குறிப்பிட்ட பாகத்தில் மட்டும் உள்ளதா, ஓய்வின்போது வலி குறைகிறதா, இரவு-பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது என்பதைத் தெளிவாகக் கூற வேண்டும். 

மாரடைப்பு என்றால் என்ன? ஒவ்வொரு இதய நோயும் மாறுபட்ட அறிகுறிகளை உடையது. மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை எப்படி அறிவது? மாரடைப்பு என்பது இதயத் தசைகள் இறந்து சிதைவுறுதலாகும். இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் பின்வரும் அறிகுறிகள் தோன்றும்:- 

1. நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; 
2. அதிக வியர்வை; 
3. நெஞ்சு இறுக்கம்; 
4. மூச்சுத் திணறல்; 
5. இடது தோள்பட்டை, கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல். 

ஆண்களுக்கு பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது போல் தோன்றும். பெண்களுக்கு நெஞ்சு எரிச்சல், மூச்சுத் திணறல், மேல் வயிறு எரிச்சல் தோன்றி, வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றும். "ஆஞ்சைனா பெக்டோரிஸ்' (இதயத் தமனி நோய்) இதய தசைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படுகிறது. அதிக வேலை, மன அழுத்தம், மன அதிர்ச்சியின்போது பெரும்பாலானவர்களுக்கு லேசான நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், நெஞ்சு இறுக்கம் தோன்றி சரியாகிவிடும். "வாசோஸ்பாஸ்டிக் ஆஞ்சைனா': இந்த நிலை இதயத் தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதால் தோன்றும். இதனால் இரவு நேரங்களில் இதயம் படபடப்புடன் இயங்கி தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. உங்கள் அறிகுறிகளை தெளிவாகக் கேட்ட பிறகு, மருத்துவர் மேலும் சில உடல் பரிசோதனைகளைச் செய்து நோயின் விவரங்களை அறிவார். அவை:- 

1. நகங்கள், நாக்குகளில் ஆக்ஸிஜன் குறைந்து நீலம் பாயந்திருக்கிறதா? 
2. கை, கணுக்கால்களில் வீக்கம் உள்ளதா? 
3. நாடித்துடிப்பு நிலை கண்டறிதல்; 
4. இதயத் துடிப்பின் வேகம், எண்ணிக்கையை ஸ்டெதஸ்கோப் மூலம் கண்டறிதல்; 
5. "மர்மர்' - இதய ரத்த ஓட்ட தடையினால் ரத்தக் குழாய் சுருங்கி ரத்த ஓட்டத்தில் இரைச்சல் கேட்கும் நிலையை அறிதல். 

இவை தவிர, மேலும் சில மருத்துவப் பரிசோதனைகளை இதய நோயின் பாதிப்பு இருக்கிறதா என் அறிய செய்ய வேண்டியிருக்கும்.இதயப் பிரச்னைகளை அறிய செய்யப்படும் பரிசோதனைகளான "எக்கோ', "ஆஞ்சியோகார்டோகிராம்' ஆகியவை ஆக்ஸிமெட் மருத்துவமனையில் வலியில்லாமல், ஊசிகூட துளைக்காமல் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment